
என்ன கிளியே! வண்ணக் கிளியே
காஞ்சி காமகோடி இளைய சங்கராச்சாரியார் சங்கர
விஜயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள் பிறந்த ஊர் தண்டலம் எனும் திருத்தலம். அங்கு நான் முதல் முதல் 1988-ஆம் ஆண்டு சென்றிருந்தேன்,
அங்குள்ள சிவன் கோவிலுக்குச் சென்றேன். முற்றிலும் வயல்வெளி. கார், வண்டி செல்லப் பாதை கிடையாது. இறங்கி வயல் வரப்பில் நடந்து தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். கோவில் வாசலை அணுகும்போது அருகில் இருந்த ஆலமரம். மாமரம் ஆகியவற்றிலிருந்து ஒரு நூறு கிளிகள் இருக்கும். ‘கீச் கீச்’ என்று கூவியவாறு என்னை வரவேற்றன.
என் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. இந்தக் கோலாகல வரவேற்புடன் கோவிலைத் தரிசித்து வந்தேன். திரும்பி வரும்போது என் மனத்தில் உதித்ததுதான் ‘என்ன கிளியே வண்ணக் கிளியே’ எனும் பாடல். ஏற்கெனவே ‘அமுதசுரபி ‘ இதழில் பல வருடங்களுக்கு முன்பு வெளி வந்தது. பாடகர் எஸ்.பி.ராம அதற்குக் கர்நாடக சங்கீத ராகங்கள் அமைத்துப் பல முறை தமிழ் இசை விழாவில் பாடியிருக்கின்றார்.
ஒரு முறை திருமதி. கிருஷ்ணகுமாரி நரேந்திரனிடம் காண்பித்தபோது “எனக்கு இந்தப்
பாட்டைத் தாருங்கள். ராகம் அமைத்து என் அபிநய நாட்டியாலய மாணவிகளைக் கொண்டு நடனம் ஆடச் செய்ய வேண்டும்”. என்று கேட்டார்; கொடுத்தேன்.
குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்து கொடுக்க, அதனை அபிநய
நாட்டியாலய மாணவிகளைக் கொண்டு ஆடச் செய்தார்.
அமெரிக்காவில் அடிக்கடி நடனப் பயிற்சி மேற்கொண்டு பயணம் செய்யும் திருமதி. கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
அங்குக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்போவதாகக் கூறி பாட்டைக் கேட்டிருந்தார். “உங்கள் கிளிப்பாட்டு அமெரிக்ககவிற்குச் சென்று அங்கு பறந்து கொண்டிருக்கப் போகின்றது ” என்றார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,
இப்பாடல் தற்போது ‘அபிராமி’ மாத இதழில் வெளிவருவது எனக்குப்
பேரானந்தத்தைத் தருகின்றது.
“தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்டஸ்” நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் திரு.அருணாசலம் என்பவர். அவரது மனைவி திருமதி பானுமதி. என் கணவர் திரு.ஏ.சி.எம். அவர்களையும் என்னையும் திருப்போரூர் அருகில் மேலையூர் நாகபாணீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். சென்று திரும்பும் வேளையில் எங்களைத் தங்களது இல்லத்திற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் சென்றிருந்தோம்.
அங்கு அவர்கள் வளர்க்கும் கிளியைப் பார்க்கும் பேறு கிட்டியது. திருமதி. பானுமதியின் கையிலமர்ந்து வந்த கிளியின் பெயர் “சிலகா”. அவர்கள் அதனை “சிக்கு” என்று
அன்புடன் அழைக்கின்றார்கள். சிலகாவின் ஒரு சிறகும் ஒரு காலும் ஏதோ விபத்தில் ஊனமடைந்து அது அவர்கள் வீட்டில் வந்து சேர்ந்ததாம். திருமதி. பானு அதனைப் பாதுகாத்து அதன் காயங்களைக் குணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.
தற்போதும் அதனால் பறக்க இயலாது. காலால் கெட்டியாகப் பற்றிக் கொள்ளவும் இயலாது. உடலில் ஊனமுற்ற “சிலகா”வின் அறிவில் ஊனமில்லை. அவர்கள். “சிக்கு, விசிலடிமா”, என்றால் போதும், அழகாகச் சீட்டி அடிக்கின்றது. முகத்தை அவர்கள் கை மீது பதிததுக் கொஞ்சுகின்றது. சிக்குவைப் பார்த்த நான் அதனிடம் மனதைப் பறி கொடுத்தேன். “என்ன கிளியே வண்ணக்கிளியே” எனும் எனது பாடலை ‘சிக்கு’ என்ற சிலகாவிற்குக் காணிக்கையாக்குகிறேன்.
இதோ பாடல்:
| என்ன கிளியே! வண்ணக் கிளியே!! |
அன்னை காமாட்சி கையில்
அமர்ந்திருக்கும் ஆசைக் கிளியே |
வஞ்சி அவளிடம் வாஞ்சையாகவே
வந்து வந்து பேசுவது என்ன கிளியே? |
அவளிடம் கொஞ்சிக் கொஞ்சிப்
பேசுவது என்ன கிளியே? |
பரமகுரு அருணகிரி நாதருக்குத் திருப்புகழைப்
பரிந்தளித்த பண்புக் கிளியே! |
மதுரை மீனாட்சி மீது
மகிழ்ந்திருக்கும் மங்கலக் கிளியே! |
பாஸ்கர ராயருக்கு வேதபாடம்
சொல்லித் தந்த பாசக் கிளியே! |
மங்கையர்க்கரசி அவள் மயங்கிடவே
பேசுவது என்ன கிளியே? |
பச்சையும் செம்மையும் பாங்கான
வண்ணங்களாய்க் கொண்ட கிளியே! |
திரிபுரசுந்தரி தோளில்
தவழ்ந்திடும் தங்கக் கிளியே! |
பார்வதி பரமசிவன் பிரியாக் கோலம்
பகரும் பச்சைக் கிளியே! |
தேன் சிந்த அவளிடம் தித்திப்பாய்ப்
பேசுவது என்ன கிளியே? |
மாமரச் சோலையிலே மாலைவேளையிலே
மழலை பேசும் கிளியே! |
சிவகாமசுந்தரி மேல் சிங்காரமாகவே
அமர்ந்திருக்கும் சின்னக் கிளியே! |
வயக்காட்டுக் கோவில்தனில் வருவோரை
வரவேற்கும் வண்ணக் கிளியே! |
செல்லமாய் அவளிடம் சிரித்துச் சிரித்துப்
பேசுவது என்ன கிளியே? |
உலகம் புரியவில்லை. ஓதி
உணர்த்த வா உத்தமக் கிளியே! |
வள்ளிக் குறத்தியின் ஆலோலப் பாட்டிற்கு
அழகாய்ச் சிறகடித்துப் பறக்கும் கிளியே! |
உயிருக்குயிராக உன்னை என்உள்ளத்தில்
போற்றுவேன் உல்லாசக் கிளியே! |
 |
 |